Tuesday, November 26, 2013

நடமாடும் நூலகம் - கனவும் நனவும்


பேராசிரியர் டாக்டர்.நாகராசன்.

நூலகத் தந்தை என்றழைக்கப்பட்டவர் டாக்டர்.எஸ்.ஆர்.ரங்கநாதன்.  அவர் ஒரு நூலகராக நூலகவியல் பேராசிரியராக மட்டுமே அறியப்பட்டவர்.  அவர் முதியோர் கல்வியிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்.  நகரத்தில் பல்கலைக் கழகத்திலும் படித்தவர்கள் மத்தியிலும் நூலகச் சேவை செய்வதைத் தவிர கிராமத்தில் வாழும் மக்களுக்கும் நூலகச் சேவை தேவை என்று கருதி அதற்கென ஒரு திட்டத்தை உருவாக்கினார்.  தன்னுடைய பிறந்த ஊரான சீயாழியில் இந்த சேவையைத் தொடங்கத் திட்டமிட்டார்.  அவரது திட்டத்தின்படி ஒரு மாட்டுவண்டியில் படிக்கத் தேவையான நூல்கள்  வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்.  சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் தங்கள் ஊருக்கு அந்த நூலகத்தை தங்களுடைய மாடுகளைக் கொணர்ந்து பூட்டி எடுத்துச் சென்று நூலகத்தைப் பயன்படுத்திவிட்டு மீண்டும் சீயாழியில் கொண்டுவந்து விடவேண்டும்.  இந்தச் செயல்முறையில் சீயாழியைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துக்கும் நூலக சேவை கிடைக்கும்.  இந்தத் திட்டத்திற்கான கருவை அவர் ஒரு செயல் திட்டமாகத் தீட்டினார்


அவருடைய திட்டத்தின்படி கிராமத்தில் உள்ள எல்லா வயதினரும் பயனடையவேண்டும் என்ற கருத்தைச் செயல்படுத்தி நடமாடும் நூலகத்தை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்



சில ஆண்டுகளில் இந்த நடமாடும் நூலகத்தை மேற்பார்வையிட்டுச் செயல்படுத்தத் தக்கவர்கள் இல்லாததால் இந்த நூலகம் செயல் இழந்து காலப் போக்கில் காணாமல் போனது.  வரலாற்றில் இந்தத் தகவல் இருந்தாலும் நடமாடும் நூலகம் எங்கே போனது என்ற தகவல் கிட்டவில்லை.  இந்நிலையில் ஒரு சீட்டுவிளையாடும் கிளப்பின் அட்டாலியில் இந்த நூலகத்தின் நூல்கள் 1980-களில் கண்டுபிடிக்கப்பட்டு தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம் இந்த நடமாடும் நூலகம் பற்றி ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டது.  அந்த நூலகம் மீண்டும் மாடுகள் பூட்டப்பட்டு கிராமம் கிராமமாக்ச் செல்லவேண்டும் என்ற திட்டம் மட்டும் ஏனோ செயல்பாட்டுக்கு வரவேயில்லை.

நன்றி - படங்கள்: http://www.ilaindia.net/Images/SR/TheFather/booksonwheelsthemobilelibraryservicesrranganathanattheageof70isseenintheleft.html

2 comments: