Saturday, June 6, 2015

ஶ்ரீரங்கம் கோயிலின் பழைய நெல் பத்தாயங்களும், தாயார் மறைந்திருந்த வில்வ மரமும்!

3 மறுமொழிகள்

ஶ்ரீரங்கம் கோயிலுக்கு நேற்றுப் போனபோது தாயார் சந்நிதிக்குப் போகும்போது  வழியில் செங்கமலத் தாயார் சந்நிதி மற்றும்  கொட்டாரம் என்னும் இடத்தின் சுற்றுச் சுவரை இடித்திருந்தார்கள். பழமையான கட்டிடம் என்பது செங்கற்களின் அமைப்பிலிருந்தே தெரிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்தபோது மேலப் பட்டாபிராமர் சந்நிதிக்கும் இந்தக் கொட்டாரத்துக்கும் நடுவே கீழ்க்கண்ட நெல் பத்தாயங்கள் காட்சி அளித்தன. மிக மிகப் பெரியவை. பிரம்மாண்டமான பத்தாயங்கள். மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஏணி மேல் ஏறி உள்ளே நெல்லைக் கொட்டுவார்களாம். அப்படி எனில் அப்போதைய மனிதர்கள் எவ்வளவு உடல் பலத்தோடு இருந்திருக்க வேண்டும்! ஆச்சரியமாக இருந்தது. மொத்தம் 6 நெல் பத்தாயங்கள் இருந்தன. அவற்றைக் கைபேசியின் உதவியோடு படம் எடுத்துக் கொண்டேன். கீழே பார்க்கலாம்.சில இடங்களில் துணியால் மூடி இருக்கின்றனர். செருப்பு இல்லாததால் கிட்டே போக முடியவில்லை. காலில் மண்ணும், கல்லும் குத்தி ஒரே அவஸ்தை! :(

இந்தப் பத்தாயத்தைப் பார்த்தால் அந்தக்காலத்தில் இவ்வளவு நெல் விளைந்திருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது.  நெல் குதிர், நெல் களஞ்சியம் என்றும் சொல்லலாம்.





பின்னர் அங்கிருந்து தாயார் சந்நிதிக்குச் சென்றால் அங்கேயும் ஒன்பதே முக்காலுக்குத் தான் நடை திறப்பாங்களாம். சரினு அது வரை உட்கார்ந்து இருந்தோம். நான் தாயார் சந்நிதியின் வெளியே வரும் வாயிலில் உள்ள படிகளில் உட்கார்ந்தேன். அப்போது தான் இந்த வில்வமரம் காட்சி அளித்தது. மொகலாயர் படை எடுப்பின் போது தாயாரை வில்வமரத்தடியில் தான் புதைத்து வைத்தார்கள். அந்த வில்வ மரமும் தாயார் சந்நிதிக்கு வெளியே இருந்ததாகத் தான் சொல்கிறார்கள். ஆகவே இதுவாக இருக்குமோனு ஒரு சந்தேகம். எத்தனை வருஷங்கள் வில்வமரம் இருக்கும்னு தெரியலை. ஆனாலும் இதுவும் மிகப் பழமையான வயதான மரம் தான்





இது அந்தப் பழைய வில்வமரம் தான் என ரஞ்சனி நாராயணன் உறுதி செய்கிறார். அவர் பாட்டி காலத்திலேயே இருந்ததாம். இங்கே தான் மொகலாயப் படை எடுப்பின் போது வில்வ மரத்துக்குக் கீழே தாயார் விக்ரஹம் புதைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அழகிய மணவாளர் என்னும் நம்பெருமாள் திருப்பதியிலிருந்து திரும்ப ஶ்ரீரங்கம் கொண்டு வரப்பட்ட பின்னர் தாயார் விக்ரஹம் கிடைத்தது என்று சொல்கின்றனர். 

மறுமொழிகள்

3 comments to "ஶ்ரீரங்கம் கோயிலின் பழைய நெல் பத்தாயங்களும், தாயார் மறைந்திருந்த வில்வ மரமும்!"

sury siva said...
June 6, 2015 at 6:30 AM

Historic Importance a lot.

subbu thatha3

geethasmbsvm6 said...
June 28, 2015 at 12:57 AM

thanks for coming to this blog Subbu thatha.

Sriram said...
November 11, 2015 at 4:23 AM

Thanks for the information. It's not Mughal but during Ulugh Khan's (Mohd Bin Thuglaq) aggression in 1323.

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES