Tuesday, January 17, 2012

எங்க வூட்டுப் பொங்கல்...!

0 மறுமொழிகள்
பொங்கல் 2012

அட...அதுக்குள்ள ஒரு வருடமாகி விட்டது ..
( டிசம்பர் 20 லிருந்தே வீட்டைப் புரட்டிப்பூடும் வேலைகள் தொடங்கிவிடும் ...கிறிஸ்துமஸ் ( 7அடி உயர மரம் நடுக்கூடத்துக்கு வந்துவிடும்) , புத்தாண்டுக் கொண்டாட்டங்க்கள் , பொங்கல்திருவிழா என............)

கோலத்துடன் துவங்கும் நாள்:(12மணிக்கு ஆரம்பித்து ....3 மணிக்கு முடித்தது ...)






ஆரம்பம் ... ஆற்றுமணல் பரப்பி, பொங்கக்கட்டி வைத்து, மேலே பொங்கப்பானை ஏற்றி முடிக்க ஒரு அரைமணி நேரம் ஆக்கிவிட்டார்கள் ... 'சும்மா தூக்கி வைக்கிறதை ஏன் இவ்ளோ பெரிய வேலைமாதிரி செய்றாங்க ??? " அதிகாலையிலேயே நம் பொறுமைக்கு சோதனை...ஆனால் இதன் ரகசியம் அப்புறமாத்தான் தெரிஞ்சது.

கற்பூரம் வைத்து பற்ற வைத்தாகிவிட்டது.

பனையோலை மூலம் இனிய தொடக்கம்.

பொங்கல்



பனங்கிழங்கு ...காய்கறிகளின் ஒரு பகுதி .


பனங்கிழங்கு : (மேக் அப் இல்லாமல்)



பருத்திமார், பனையோலை,பொங்கக் கட்டி அடுப்பு ..




காய்கறிகள் ...தயாராகிக் கொண்டிருக்கிறது (உபயம் .. நான் )




பொங்கக் குழம்பு.......


ஒரு சிறுகுறிப்பு : இந்தக் குழம்பின் சுவைக்காக இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும் .. இடையில் எவ்ளோதான் ஆசைப்பட்டு அப்படியே தலைகீழே நின்னாலும் ’அந்த ‘ சுவைபோல அமையவே அமையாது . அளவு , அடுப்பு , பாத்திரங்கள்(குக்கர்) எல்லாம் மாறுவதால் இருக்கலாம்.... ( ஒருவேளை பொங்கலுக்கான காய்கறிகள் வாங்குவதிலிருந்து , வெட்டிக் கொடுப்பது வரையிலும் ‘ நான்’ செய்வதால் அந்த சுவை அமைந்திருக்க வாய்ப்புண்டு என்பதை தன்னடக்கத்துடன் இங்கே சொல்லாமலேயே விட்டுவிடுகிறேன் )
150 லிட்ட கொள்ளளவு உருளியில் ...தொடர்ந்து பனையோலை அடுப்பில்...(புகையால் பக்கத்திலிருந்து எதிர்ப்பெல்லாம் வரும் ) சூடாகிக் கொண்டே இருக்கும் . தெரிஞ்ச இடத்துக்கெல்லாம் ஆர்டரின் பேரில் பார்சல் சர்வீஸ் நடந்துக்கிட்டே இருக்கும்.
இரண்டாம் நாளில் காய்கறிகள் எல்லாம் சேர்ந்து உருகி ஒரு அமுதமாகிவிடும் :)


படங்களும் விளக்கமும்: துரை.ந.உ

Sunday, November 6, 2011

காளையார் கோயில் - மருது சகோதரர்கள்

0 மறுமொழிகள்

வணக்கம்.

கடந்த 30/10/2011 அன்று காளையார் கோயில் சென்று வழிபாடும் பேறு கிடைக்கப் பெற்றேன். அன்று மாமன்னர் மருது சகோதரர்களை வணங்கிய போது ஐயா ‘இ‘னா அவர்களும் ஐயா செல்வன் அவர்களும் எனது நினைவிற்கு வந்தனர். அவர்களுக்காகவும் அந்தக் காளீசுவரிடமும் மன்னர்களிடமும் வேண்டிக் கொண்டேன்.








கானப்பேர் எயில் என்ற காளையார் கோயில், மருது சகோதர்களால் கட்டி முடிக்கப் பெற்ற 9 நிலை பெரிய கோபுரம், மற்றும் வரகுண பாண்டியனால் கட்டப்பெற்ற 5 நிலை கோபுரம்.




மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்


(வழிபாட்டிற்கு உரிய மன்னரது சிலையைச் சுற்றிலும் குப்பை போடப்பட்டிருப்பதும், அவரது பெருமைகளை அம் மண்ணின் மைந்தர்கள் அவ்வளவாக உணராமல் இருப்பதும் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது)

மகா சிவபக்தனாகத் திகழ்ந்த சிவகங்கைசீமையின்இரண்டாவது மன்னர் மாவீர முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர். இவர் 1750 முதல் 1772 வரை இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இந்திய மண்ணில் இவரே வெள்ளையர்களை எதிர்த்து முதல் சுதந்திர முழக்கம் செய்தவர். காளையார் கோயில் கடும் போரில் வெள்ளையர்கள் மறைந்து நின்று கை எறி குண்டுகளை வீசியபோது 25/6/1772 இல் வீரமரணம் அடைந்தார்.

இவருடன் போரில் காளையார் கோயிலைச் சேர்ந்த இவரது இரண்டாவது மனைவி கன்னிராணி கௌரி நாச்சியாரும் உயிர் துறந்தார். இவரது அமைச்சர் தளவாய் தளவாய்தாண்டவராய பிள்ளை. தளபதிகள் மாவீரர்களான மருது பாண்டியசகோதரர்கள்.




பெரிய மருது








சின்ன மருது




- முனைவர் காளைராசன்



Monday, September 5, 2011

ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்

0 மறுமொழிகள்
மேல்பட்டு - ஆசியாவின் பெரிய அடித்தண்டு கொண்ட நீர் மரம்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நீர் மரத்தின் அடிதண்டை கட்டிப்பிடிக்க 20 மாணவர்கள் கை கோர்க்க வேண்டும். இந்த மரம் உள்ள இடம் ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமம். இதன் இயற்கை வளமிக்க அழகான கிராமம். திருவண்ணாமலை - போளூர் வழியாகவும், வேலூரிலிருந்து அமிர்தி வழியாகவும், திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் வழியாகவும், செங்கத்திலிருந்தும், பல கொண்டையூசி ( ஹேர் பின் ) வளைவுகள் உள்ள மலை பாதைகள் வழியாக ஜவ்வாது மலைக்கு செல்ல வேண்டும்.


இதில் ஜவ்வாது மலையிலிருந்து செங்கம் வழியாக இறங்கும் போது மேல்பட்டு கிராமத்தை கடக்க வேண்டும். மலை நீரோடைகள் நிறைந்த பசுமையான கிராமம். இங்கு சுமார் 140 வருடங்களுக்கு முன் பிரிடிஷ்காரர்கள் கட்டியுள்ள அருமையான தங்குமிடம் உள்ளது. எந்த பாதை வசதியும் இல்லாத காலத்தில் குதிரை, கழுதை ஆகியவற்றின் மீது பொருட்களை கொண்டு வந்து கட்டியுள்ளனர்.



மேல்பட்டு கிராமம் குறித்து இன்னொரு முக்கிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் இந்த பகுதி நன்னன் சேய் நன்னன் என்பவன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இவனுடைய தந்தை நன்னன் பர்வதமலை என்ற இடத்தில் ( செங்கம் அருகே உள்ள இன்னொரு பழமை சிறப்பு மிக்க மலை. சுமார் 4 ஆயிரம் அடிகள் உயரம் கொண்ட அந்த மலை இப்போது ஆன்மீக தளமாக புகழ்பெற்றுள்ளது ) இருந்து ஆட்சி செய்து, பிறகு அதியர்களால் விரட்டியடிக்கப்பட்டபோது, போரில் உயிர் தப்பி வந்து ஜவ்வாது மலையின் இந்த பகுதியில் ஆட்சி செய்தவன். இவனிடம் பரிசில் பெற வந்த புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வழித்தடங்கள், அடையாளங்கள் இப்போதும் அப்படியே உள்ளன. அதில் ஒரு பாடல் வருடம் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டுள்ள மலை நிலத்தை கடந்து நன்னன் சேய் நன்னன் உள்ளதாக குறிப்பிடும்.



செங்கத்தில் இருந்து பரமானந்தல் என்ற கிராமத்தை கடந்து சுமார் 25 கிலோ மீட்டர்கள் வளைவுகள் நிறைந்த மலை பாதை வழியே பயணித்து மேல்பட்டு கிராமத்துக்கு செல்லும் முன் இந்த நீர் மரம் அருகே சற்று இளைப்பாற உட்கார்ந்தால் இன்றும் மணிக்கு ஒரு முறை உங்களை தழுவி தாலாட்டும் சாரல் மழை.




வாலியம் பாறை - குள்ளர் குகைகள்



அப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.


போளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.



மலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, பன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் )
அதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.









என்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.



இதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.






எடதனூர் - வாலியர் வீடு



படங்களும் தகவல்களும்: ப்ரகாஷ் சுகுமாரன்





Friday, August 5, 2011

தென்பெண்ணை ஆற்றங்கரையோர நடுகல் கோயில்கள்

0 மறுமொழிகள்
தினமும் செல்லும் வழிதான் என்றாலும் புதியதாக வாங்கிய கேமிராவில் இயற்கை காட்சிகளையும் மற்றவற்றையும் படமெடுக்கலாம் என்று தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக சென்றபோது மாட்டியது இந்த நடுகல்.


ஆற்றங்கரையோரமுள்ள கோயில்:




நடுகல் கோயில்



-M.S.Murali (B+ve)
99430-94945

Sunday, July 31, 2011

பெண்ணை ஆற்றங்கரை நடுகல் கோயில்கள்

0 மறுமொழிகள்
இந்த நடுகற்களில் பெரும்பாலானவற்றில் உள்ள எழுத்துக்கள் இன்னும் முழுமையாக படிக்கப்படவில்லை. அவற்றின் காலங்களை கணிப்பதிலும் பல முரண்பாடுகள்.




களிமண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் தொண்டமாநூர் காணித்தா கோயில் அருகே கிடைத்தன. இவற்றின் உடல் பகுதிகள் சிதைந்து குப்பைகள் போல உள்ளது. கிடைத்த தலைகளை கவனிக்கும் போது ஒவோவ்வொரு முக அமைப்பும் வேறுபடுகிறது. கூறிய மூக்கு, நீண்ட மூக்கு, தட்டையான மூக்கு, குண்டு மூக்கு என வித்தியாசங்கள் தெரிகின்றன. காதுகளின் அமைப்பிலும், அணிகலன்களிலும் பல வித்தியாசங்கள். தலை பாகை வைத்தும், மொட்டையாகவும், ஜடா முடியுடனும், கூந்தலுடனும் உள்ளன. சில ஐரோப்பிய, சீன முக அமைப்பு கொண்டதாகவும் தெரிகிறது.





இது பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கி, ஆன்ம விவாதங்களை செய்துள்ளதை தெரிவிப்பதாக உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நடுகல் கோவில் அருகிலேயே கற்படுக்கைகளுடன் மூன்று அறைகள் கொண்ட குகை பாறையில் குடையப்பட்டு உள்ளது. ஆற்றங்கரையில் பல இடங்களில் சிறு சிறு கோவில்கள் மற்றும் குகைகள் காணப்படுகின்றன.

நடுகற்களில் படைக்கப்பட்டுள்ள உருவங்கள் நீண்ட தலை முடியுடன் உள்ளன. சிலவற்றில் தலைபாகை காணப்படுகின்றது. பெரும்பாலும் கூறியதாக உள்ள மூக்கின் அமைப்பில் சிலவற்றில் மட்டும் மாற்றம் தெரிகிறது. வீரர்களின் தலைக்கு மேல் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை கொண்டு அவனது செல்வதை அறியமுடியும். பெரும்பாலும் ஒரு கையில் வில்லுடன், மறுகையில் குருவாளுடனும் வேட்டைக்கு தயாரான நிலையில் உள்ளன. ஒட்டிய வயிறும், திண்மையான புஜமும் அவர்கள் இளமையானவர்கள் என்பதை தெரிவிக்கின்றன.

இது குறித்து நந்தி மலை முதல் கடலூர் வரை பெண்ணை ஆற்றின் இரு கரைகளில் உள்ள கிராமங்களில் உள்ள கோயில்கள், நடுகற்கள், மக்களின் சாதி அமைப்புகள், சமய சடங்குகள் ஆகியவற்றை கடந்த 14 வருடங்களாக பதிவு செய்து வரும் பழனிவேள் என்ற ஆய்வாளர்,
சண்டைகள் அல்லது வேட்டைகளின் பொது இறந்தவர்களுக்கே நடுகற்கள் வைத்து வணங்கும் வழக்கம் உள்ளதாகவும். அது ஒரு தனி நபருக்கான நடுகல் என்பதை விட ஒரு தலைகட்டை சேர்ந்த தலைவனுடன் இறந்த பல வீரர்களுக்கான நடுகல் என்கிறார். மேலும் இந்த வீரர்கள் எல்லாம் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதற்க்கு மேல் அவர்கள் வாத்தியாராக ( மற்ற இல வயதினருக்கு வேட்டை உள்ளிட்ட வாழ்வியல் தேவைகளை சொல்லி கொடுப்பவராக ) மாறி ஆற்றின் கீழ் கரைக்கு சென்று விடுவார்கள் தெரிவிக்கின்றார்.



தவிர நடுகற்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் போர்கள் நடந்ததற்கான அடையாளம் என்பதை விட, ஆநிரை கவர்தல் அல்லது மீட்டல், பெண்களை கவர்தல் அல்லது மீட்டல் போன்ற உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக நடந்த சண்டைகளில் இறந்தவர்களுக்கு வைக்கப்பட்டவை. காதலுக்காக உயிர் நீத்தவர்களும், வேட்டையின் போது உயிரை விட்டவர்களும் கூட இதில் அடக்கம், என்கிறார்.



தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என பல குலத்தினர் ஆண்டு வந்தாலும் சமூக கட்டமைப்பு கீழிருந்து மேலாக பரவி சீரானதாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை இந்த நடுகற்கள் தெரிவிக்கின்றன. எங்கேயோ மதுரையிலும், காஞ்சியிலும் இருந்து கொண்டு நாட்டை ஆண்ட மன்னர்களுக்கும், இங்கே ஆடு, மாடுகளுக்காகவும், பெண்களுக்காகவும் நடைபெறும் சண்டைகளுக்கும் அதிக நெருக்கம் இருந்திருக்க முடியாது. எனவே கேட்பாரற்று காடுகளிலும், மலைகளிலும், ஆறுகளிலும் கிடக்கும் நடுகற்களை ஆராய்ந்தால் மறைந்து கிடக்கும் பல வரலாறுகளை வாசிக்க முடியும்.

தவிர ஆங்காங்கே கிடைக்கும் இது போன்ற பதிவுகளை வரலாற்று சின்னங்களாக கருதி, அவற்றில் இருக்கும் செய்திகளை தனி தனியாக பதிவு செய்வதை விட, அவை கிடைக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் கலாசாரத்தையும், சடங்குகளையும், வாழ்வியல தேவைகளையும், வாய்ப்புகளையும் இணைத்து படித்தால் உயிரோட்டமாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் உண்மையான தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்பது என் கருத்து.


நடுகற்கள் குறித்து நீண்ட ஆய்வு மேற்கொண்டுள்ள பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களில் எங்காவது, யாராவது வேடியப்பன், வேடிச்சி என்ற பெயரை கொண்டிருந்தாலோ அல்லது அந்த பெயரில் வியாபார நிறுவனங்களை நடத்தி வந்தாலோ, வேடியப்பன் சாமியை குல தெய்வமாக கொண்டிருந்தாலோ, அவரிடம் தைரியமாக உங்கள் பூர்வீகம் திருவண்ணாமலையா என கேட்கலாம். நிச்சயம் ஆம் என்ற பதிலே வரும். இதையே விழுப்புரம் பகுதியில் முனியப்பன் என்றும் வேலூர் பக்கம் ஐயனார் என்றும் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டங்களில் இவை மாரியப்பன் என்ற பெயரில் வழங்குவதாகவும், கோவில் பட்டி தாலுகாவை ஒட்டியுள்ள கழுகு மலை என்ற கிராமத்தில் மொத்தமுள்ள சுமார் ஆயிரத்து ஐநூறு குடும்பங்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆண்களாக இருந்தால் மாரியப்பன் அல்லது மாரிசாமி என்றும் பெண்களாக இருந்தால் மாரிமுத்து, மாரியாத்தா என்றும் பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, பிள்ளைகள் என அணிவருக்குமே மாரிமுத்து, மாரியப்பன் என பெயர் இருக்கும் விசித்திரம் இன்றும் காலா காலமாக தொடர்கிறது.

இதேபோல திருவண்ணாமலை அருகே உள்ள மஞ்சம்பூண்டி என்ற கிராமத்தில் உள்ள அனைவருமே சோலையப்பன், சோலையம்மா என்ற பெயர்களில் மட்டுமே கூப்பிடப்படுகின்றனர். அங்கு சென்று சோலை வீடு எது என கேட்டால் நம்மை விசித்திரமாக பார்கிறார்கள். எந்த வீட்டு சோலய கேக்கிறீங்க.. ஒன்ன பாத்தா படிச்சாப்புல தெரீது.. அப்ப மேலதெரு கீழூட்டு மொத மவன் சோலயா.. இல்ல மூணாந்தெரு நொண்டி சோல மவளா.. என கேட்டு தலை சுற்ற வைக்கிறார்கள்.





-ப்ரகாஷ் சுகுமாரன்

Saturday, July 23, 2011

பெண்ணை ஆற்றங்கரை நடுகற்கள்

0 மறுமொழிகள்
தர்மபுரிஇலிருந்து கடலூர் வரை கெடிலக்கரை என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெண்ணை ஆற்றின் கரைகளில் ஏராளமான நடுகற்கள் உள்ளன. குறிப்பாக திருவண்ணாமலையில் செங்கம், தானிபாடி, தண்டராம்பட்டு, ஆகிய பகுதிகளில் மிகப்பழமை வாய்ந்த நடுகற்கள் அதிக அளவில் உள்ளன. ஆநிரை கவர்தல், மீட்டல், பெண்களை கவர்தல், மீட்டல் ஆகிய காரணங்களுக்காக நடை பெற்ற போர்களில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு இந்த நடுகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக வேடியப்பன் காவு என குறிப்பிடபடும் இந்த நடுகற்கள் சிறு தெய்வமாக கொண்டாடப்படுகிறது. சில பகுதிகளில் முனீஸ்வரன், சுடலை மாடன், ஐயனார், வேடிச்சி, என வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. தண்டராம்பட்டு அருகே எடத்தனூர் என்ற கிராமத்தில் தன் எஜமானனுடன் சேர்ந்து போரிட்டு இறந்த கொவிவன் என்ற நாய் உருவத்தையும் கருந்தேகியதி என்ற அந்த வீரனுடன் சேர்த்து உருவம் பதிக்கப்பட்ட நாடுகள் உள்ளது. இதே போல புலி குத்தி பட்டான், பன்றி குத்தி பட்டான், முயல் குத்தி பட்டான் என வேட்டையாடும்போது இறந்த வர்களுக்கும் நடுகற்கள் உள்ளன.





ஆண்கள் போரில் தோற்று இறக்கும் போது பெண்களே முன் வந்து போரிட்ட குறிப்புகளும் அப்படி இறந்தவர்களுக்கு வேடிச்சி என்ற பெயரில் நடுகற்கள் உள்ளன. அதேபோல கணவன் இறந்த பிறகு உடன் கட்டை ஏறிய மனைவிகளுக்கு வைக்கப்பட்ட நடுகற்கள் தீப்பாஞ்சாள் எனப்படுகிறது. பெண்களின் நடுகற்கள் பெண்ணை ஆற்றின் கீழ் கரையிலும், ஆண்களுக்கான நடுகற்கள் மேல் கரையிலும் உள்ளன.








Monday, May 2, 2011

Sand blasting தடை செய்யக் கூடிய காகித ஆயுதம்

0 மறுமொழிகள்


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES