Monday, April 27, 2015

தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்

3 மறுமொழிகள்

 ஒரு அரிசோனன்

மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால் கோவில் தனித்து நிற்பது தெரிகிறது.  நடந்து செல்லும் தூரம்தான்.  ஆனால், ஒரு பெரிய பள்ளம் கோவிலுக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது.  எப்படிக் கோவிலுக்குச் செல்வது என்று மனம் குழம்பி, அருகில் ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும் அம்மையாரிடம் விசாரிக்கிறேன்.

“கோயிலுக்குங்களா?  இப்படியே இந்த ரோட்டுலே கிழக்கால கொஞ்ச தூரம் போனீங்கன்னா ஒரு சின்னப் பாலம் வரும்.  அதுல ஏறிப்போயிட்டே இருந்தீங்கன்னா, அது கோயிலாண்ட கொண்டுபோய் விட்டுங்க!” என்று கனிவுடன் பதில் சொல்கிறார் அந்த அம்மையார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, டிரைவரை வண்டியைச் செலுத்தச் சொல்கிறேன்.  அந்தப் பாலம் ஒரு கார் போகும் அளவுக்குத்தான் இருக்கிறது, கொஞ்சம் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போனாலும் கார் கீழே விழுந்துவிடும் நிலை.  எப்போதோ போடப்பட்ட சிமெண்ட் ரோடு.  ஆங்காங்கு நன்கு வளர்ந்திருக்கும் முட்செடிகள் காரைத் தொட்டுத் தடவிப் பார்த்து வழியனுப்புகின்றன.

ஒரு பர்லாங் தூரம் சென்றதும், ரோட்டின் ஒரு பகுதியைக்காணோம்.  டிரைவர் மிகவும் திறமையுடன், வண்டியைக் கழைக்கூத்தாடியின் திறமையுடன் செலுத்தி, ரோட்டின் முடிவை அடைகிறார்.  ராஜ கோபுரமும், கோவிலுக்கும் முன் ஒரு தடாகமும் தெரிகின்றன.  மிகவும் கீழே ஆரஞ்சு நிறத்தில் நீர் தெரிகிறது.

“இந்தக் குளத்தில் தவளைகளே இல்லையாம்!”  என்று தனக்குத் தெரிந்த ஒரு செய்தியைச் சொல்கிறார் என் சிறிய மாமனார்.


  

காரில் இருந்து இறங்கி, காலைக் கழுவிக்கொண்டு செல்லலாம் என்று நினைத்தால், குளத்துப்படிகளில் இறங்கப் பயமாக இருக்கிறது.  படிகள் நின்றுபோய் பள்ளமாக இருக்கிறது.  எனவே, நாங்கள் கொண்டுவந்த பாட்டில் தண்ணீரால் காலை நனைத்துக்கொண்டு கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்றால், வழியை மறித்துக்கொண்டு கொம்புகளை ஆட்டிக்கொண்டு நிற்கும் பசுக்களைத் தாண்டிச் செல்லத் தயக்கமாக இருக்கிறது.

டிரைவர் தைரியம் ஊட்டுகிறார். “பயப்படாதீங்க சார்.  ஒண்ணும் பண்ணாதுங்க.” என்றபடி முன்னே செல்கிறார்.  பசுக்கள் ஒதுங்கி வழிவிடுகின்றன.  அவரைப் பின்தொடர்ந்து நாங்கள் செல்கிறோம்.  சன்னதிக்கு ராஜ கோபுர வாசலில் இருந்து கீழே செல்லவேண்டி இருக்கிறது...


நான் விவரிப்பது திருத்தலையூர் என்னும் திருத்தலத்தில் இருக்கும் சப்தரிஷீஸ்வரர் கோவில்தான்.  குளித்தலையைக்குக் கிழக்கே, காவிரிக்கு வடகரையில் இருக்கும் முசிரியிலிருந்து புலிவலம் செல்லும் வழியில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தலையூர்.

என் காலம்சென்ற மாமனாரின் குலதெய்வக் கோவிலாம் அது.  ஆறேழு தலைமுறைகளுக்கு முன்னர் திருத்தலையூரில் இருந்த என் மாமனாரின் முன்னோர், பஞ்சம் வந்துவிடவே, அதை விட்டு நீங்கி காவிரிக்குத் தென்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் குடியேறிவிட்டார்களாம்.  குலதெய்வ வழிபாட்டைத் தொடரவேண்டும் என்ற அவாவினாலும், அம்மன் குங்குமாம்பிகைக்குப் புடவை வாங்கிச் சாத்துவதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் திருத்தலையூருக்கு வந்திருக்கிறோம்.


ராஜகோபுரத்தைப் பார்த்தால், கலைநுணுக்கங்களுடைய சிலைகள் வண்ணம் பூசப்பட்டிருப்பது தெரிந்தது.  வண்ணம் வெளிரத்துவங்கி இருந்தது.  சில இடங்களில் செடிகளும் வளர ஆரம்பிர்த்திருந்தன.

 உள்ளே சென்று நாங்கள் கண்ட காட்சி எங்களைத் திடுக்கிடச் செய்தது.

அதை எப்படி விவரிப்பது?....

வெளியிலிருந்து பார்த்தால் கோவில் தனித்து நிற்பதுபோலத் தோன்றியது.  உள்ளே சென்று பார்த்தால் அது தவித்து நிற்பது போலத்தான் புலனாகியது.  கோவிலின் நிலையைக் கண்டு என் இதயம் கனத்தது..

 கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை.  கற்களால் கட்டப்பட்ட பழைய கோவில்.  மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன.  சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன.  சப்தரிஷீஸ்வரர் சன்னதி கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது.  சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை.



கலை நுணுக்கமானதூண்கள் பாதி சிமிட்டியில் புதைந்திருந்தன.  ஏன் இப்படி கலைச் செல்வங்களைத் தரையில் புதைத்து விட்டார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.



  நாங்கள் அர்ச்சகரைத் தேடிச் சென்றோம்.  எங்களை எதிர்கொண்டனர் ஒரு முதியவரும், மூதாட்டியும்.  அர்ச்சகர் உடல்நலமின்றிப் படுத்திருப்பதாகவும், நாங்கள் பிரகாரத்தை ஒருமுறை சுற்றிவந்தால் அர்ச்சகரை எழுப்புவதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.




எல்லாத் தெய்வங்களையும் துணி போர்த்தி மூடி இருந்தார்கள்.  எனவே, கோவிலுக்கு புனருத்தாரணம் செய்யப்போகிறார்கள் என்று அறிந்துகொண்டேன்.  கடவுளருக்கு உள்ள இரண்டு வாகனங்கள் – எவ்வளவு பழமையானவையோ தெரியவில்லை – பொலிவிழந்து நின்றன.  என் கண்களில் என்னையும் அறியாமல் நீர் திரளுவதை என்னால் தடுக்க இயலவில்லை.




  கடவுளர்களின் விமானங்களில் உள்ள சுதைச் சிற்பங்கள் மிகவும் அருமையாக இருந்தன.  எப்பொழுது குடமுழுக்குச் செய்தார்களோ, தெரியவில்லை, நல்ல வண்ணக்கலவைகளை உபயோகித்து இருந்தார்கள்.  வண்ணம் வெளிர ஆரம்பித்திருந்தது.





 ஒரு நாகலிங்க மரம் பூத்துச் சொரிந்திருந்தது.  வடமேற்கு மூலையில் ஒரு பெரிய, ,மிகவும் வயதான [சரியான குறிப்பீடு அல்ல, மரத்தின் முதுமையைக் குறிப்பிடவே அப்படி எழுதினேன்] தல விருட்சம் நின்றுகொண்டிருந்தது.  அதன் உடல் முழுவதும் முடிச்சுக்கள், ஒன்று சிவலிங்கம் மாதிரி, இன்னொன்று விநாயகர் மாதிரி – எண்ணூறு ஆண்டுகள் பழைய மரம் என்று கேள்விப்பட்டதாக என் சிறிய மாமனார் அறிவித்தார்.


கோவிலின் கட்டுமானத்தைப் பார்த்தால் அதுவும் எண்ணூறு ஆண்டுகள் பழையது போலத்தான் தோன்றியது.

எங்களுடன் வந்த அர்ச்சகரின் உதவியாளர் இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்ததாகவும், அப்பொழுதும் தான் கோவிலில் பணியாற்றியதாகவும், அப்பொழுது தனக்கு இருபத்திஐந்து வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

 பால ஆலயம் ஏற்படுத்தி, கடவுளர்களைத் துணிபோட்டு மூடியிருக்கிரார்களே, எப்பொழுது புதுப்பிக்கப்போகிரார்கள் என்று கேட்டதற்கு, எல்லாத் தூண்களையும் எடுத்துவிட்டு, சரிசெய்து மீண்டும் கட்டுவார்கள் என்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.  எப்பொழுது அது நடக்கும் என்று தனக்குத் தெரியாது, பலர் கூடி நிதிதிரட்டிச் செய்யப்போகிறார்கள் என்று சொன்னார்.  கோவில் தூண்களையும், பிரகாரத் தூண்களையும், வெளியில் உள்ள கற்சிலைகளுக்கு இயற்கையால் ஏற்பட்ட சேதத்தையும் நோக்கினால் கோவில் எண்ணூறு ஆண்டுகளுக்குமேல் தொன்மையாகமோ இருக்குமோ என்று என் மனம் சொல்லியது.

நவக்கிரகங்களுக்கு மேல்கூரையே இல்லை.  வெய்யிலும், மழையிலும் நனைந்த கோலம்தான்.


இதற்கிடையில், அர்ச்சகர் -- முப்பது வயதிற்குள்தான் இருக்கும் – அவர் பெயரும் சப்தரிஷிதானாம் – எழுந்து வந்து வரவேற்றார்.  வேறுவேலையாக வெளியூர் சென்றதில் ஜுரம் வந்துவிட்டது என்றும், களைப்பாக இருந்ததால் ஓய்வு எடுத்தவர், அயர்ந்து உறங்கிவிட்டதாகவும் சொன்னார்.

தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முந்தினது செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்.  பிரசாதத்தையும் செய்து கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

 வாசலில் கட்டி இருக்கும் பசுக்களின் பால், தயிர், நெய் கோவிலில் அபிஷேகத்திற்கும், விளக்கெரிக்கவும் பயன்படுவதாக விளக்கினார்.  மிஞ்சும் பாலை விற்ற பணத்தில் மின்சாரக் கட்டணத்தையும் கட்டுவார்களாம்.

பிரதோஷம், மற்றபடி ஏதாவது விசேஷம் என்றால் நாற்பது ஐம்பது பேர்கள் வருவார்கள், இல்லாவிட்டால் எங்களைப்போல யாரும் வந்தால்தானாம்.  சிலநாள்கள் கோவிலுக்கு யாரும் வருவதில்லையாம்.

ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

 உத்சவ மூர்த்திகள் அதன் பாதுகாப்பிற்காக வேறு இடத்திற்கு தமிழ்நாடு அறப்பணித் துறையால் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் தெரிந்தது.

 

சப்தரிஷீஸ்வரர் சுயம்பு என்றும்.  கோவில் கட்டப்பட்ட பகுதி உவர் நிலம் என்பதால், நீர்மட்டம் கீழிறங்கியதும், தாறுமாறாக நுழைவு வழி வெடித்து இறங்கியதால், சிமிட்டி போட்டு நிரவி விட்டார்கள் என்று தெரிவித்தார்.  சப்தரிஷீஸ்வரர் சந்நிதி அப்படியா நிலைத்து நிற்கிறது என்று சந்தோஷப்பட்டார்.  தெற்கு பார்த்த அம்மன் சன்னதி மேல்மட்டத்தில் இருக்கிறது.

நாங்கள் புதுப்புடவை கொண்டுவந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.  புடவையைச் சார்த்தி, அருச்சனை செய்தார்.  அதே மாதிரி சப்தரிஷீஸ்வரருக்கும் அருச்சனை செய்யப்பட்டது.

புணருத்தாரணம் பற்றிக் கேட்டதற்கு, அன்பர்கள் ஒன்றுகூடி பணம் திரட்டுவதாகவும், ஸ்தபதிகள் மேற்பார்வையில், கற்கள் ஒவ்வொன்றையும் எண்ணிட்டு, பெயர்த்தெடுத்து, சரியான அஸ்திவாரம் போட்டு மீண்டும் நிலைநிறுத்தப் போவதாகத் திட்டம் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாடு அறப்பணித் துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணிக்கு, அத்துறை முன்வந்து பொருளுதவியும், மற்ற உதவிகளும் செய்து, கோவிலுக்கு வரும் சாலையையும் புதுப்பித்து, மெயின் ரோட்டிலிருந்து நேராக கோவிலுக்கு ஒரு ரோடும் போட்டால் கோவில் பழைய பெருமையைப் பெரும் என்பதில் ஐயமே இல்லை.  அறப்பணித் துரையின் கீழுள்ள பணம் படைத்த எத்தனையோ கோவில்களில் மிஞ்சும் பணத்தில் சிறிது இப்படித் தனித்து, தவித்து நிற்கும் கோவில்களுக்கும் செலவு செய்தால், பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் புதுப் பொலிவு பெரும் அல்லவா!



உருத்திர பசுபதி நாயனார்

சப்தரிஷீஸ்வரர்தான் கண்திறந்து பார்க்கவேண்டும்!

பகிர்வு ஒரு அரிசோனன்

மறுமொழிகள்

3 comments to "தவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்"

geethasmbsvm6 said...
April 27, 2015 at 6:05 PM

படங்கள் எனக்குத் தெரிகின்றன உங்களுக்கு? தெரியலைனால் சொல்லவும். நன்றி.

Ranjani Narayanan said...
April 27, 2015 at 10:09 PM

எத்தனை பழமையான கோவில். கோவிலின் நிலை மனதை வருத்துகிறது. சப்தரீஷீஸ்வரர் மனது வைத்து இந்தக் கோவிலை புனருத்தாரணம் செய்துகொள்ள வேண்டும்.

Ranjani Narayanan said...
April 27, 2015 at 10:10 PM

படங்கள் எல்லாமே தெரிகின்றன, கீதா

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES